நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி - போலீசில் மேலாளர் புகார்


நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி - போலீசில் மேலாளர் புகார்
x
தினத்தந்தி 3 July 2020 12:15 AM GMT (Updated: 2 July 2020 10:56 PM GMT)

நடிகர் விஷாலின் தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அவரது மேலாளர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

பூந்தமல்லி,

‘செல்லமே’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால். இவர், ‘திமிரு’, ‘இரும்புத்திரை’, ‘ஆம்பள’, ‘பாயும்புலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் சென்னை வடபழனி, குமரன் காலனியில் இயங்கி வருகிறது. இவர், பல்வேறு சினிமா படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஷாலின் மேலாளர் அரி என்பவர் நேற்று வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கியம் பிரகாசத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், கூறி இருப்பதாவது:-

நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் வரை மோசடி நடந்து உள்ளது. அந்த பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையாடல் செய்தார்களா? அல்லது பணம் எப்படி மோசடி செய்யப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

புகாரை பெற்றுக்கொண்ட உதவி கமிஷனர், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசாருக்கு அந்த புகார் மனுவை அனுப்பி வைத்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story