மதுரையில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது மேலும் 4 பேர் உயிரிழப்பு


மதுரையில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது   மேலும் 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 July 2020 12:47 AM GMT (Updated: 3 July 2020 12:47 AM GMT)

மதுரையில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

மதுரை, 

மதுரையில் வேகமாக பரவும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 273 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 41 பேர் பாதிக்கப்பட்டனர். மதுரையை சேர்ந்த 4 கர்ப்பிணிகளுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 5 பேருக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 65 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 273 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

143 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

எண்ணிக்கை

கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 273 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,133ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 887 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2,203 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

4 பேர் இறப்பு

இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.

மதுரை பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர், 72 வயது முதியவர், 35 வயது பெண், 84 வயது முதியவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு வேறு சில நோய்கள் இருந்ததாகவும், இதனால் இவர்கள் இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

Next Story