கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் இ-பாஸ் கேட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்


கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் இ-பாஸ் கேட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 July 2020 11:47 PM GMT (Updated: 3 July 2020 11:47 PM GMT)

கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் இ-பாஸ் கேட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, 

கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் இ-பாஸ் கேட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இ-பாஸ்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பலர் இ-பாஸ் இல்லாமல் கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோட்டுக்கு வருகிறார்கள். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றும் ஏராளமானோர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து பல்வேறு பணிகளுக்காக கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோட்டுக்கு வந்தனர். அப்போது நடந்து மற்றும் வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி இ-பாஸ் கேட்டனர். அப்போது பலரிடம் இ-பாஸ் இல்லாததால் போலீசார் அவர்களை ஈரோட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

சாலை மறியல்

அதன் பின்னர் பொதுமக்கள் ஒன்றுகூடி சோதனைச்சாவடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் சோதனைச்சாவடியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குமேல் காவிரி பாலம் கடந்து பள்ளிபாளையம் வரை வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

மக்கள் கூட்டத்தையும், வாகன ஓட்டிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் ஒரு கட்டத்தில் சோதனை ஏதும் இன்றி அனைவரையும் ஈரோட்டுக்குள் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கூட்டம் குறைந்த பின்னர் மீண்டும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கூட்டம் அதிகரித்தால் சோதனையின்றி வாகனங்களையும், நடந்து வருபவர்களையும் போலீசார் ஈரோட்டுக்குள் அனுப்புவதும், கூட்டம் குறைவாக இருந்தால் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புவதுமாக இருப்பதால் பொதுமக்களிடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

Next Story