மீஞ்சூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு


மீஞ்சூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 July 2020 12:33 AM GMT (Updated: 4 July 2020 12:33 AM GMT)

மீஞ்சூர் அருகே நடந்து சென்ற அ.தி.மு.க. பிரமுகரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே வாயலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சிலம்பரசன் (வயது 32). அ.தி.மு.க. கிளைச் செயலாளரான இவர், நேற்று மாலை ஊரணம்பேடு கிராமம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் சிலம்பரசனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சிலம்பரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பலியான சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story