ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்ப பரிசோதனைக்கு தானியங்கி கருவி பொருத்தம்


ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்ப பரிசோதனைக்கு தானியங்கி கருவி பொருத்தம்
x
தினத்தந்தி 5 July 2020 12:00 AM GMT (Updated: 5 July 2020 12:00 AM GMT)

ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடல் வெப்ப பரிசோதனைக்கு தானியங்கி கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேருக்கு கொரோனா 

தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் நிலையம் மூடப்பட்டது. 

அவர்களிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து மீண்டும் போலீஸ் 

நிலையம் திறக்கப்பட்டது.

இதற்கிடையில் சென்னையை நிரந்தர முகவரியாக கொண்ட 49 வயது ஆண், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 

அலுவலகத்தில் பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் சென்னையில் இருந்து நீலகிரிக்கு வந்தபோது சோதனைச்சாவடியில் 

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

10 பேருக்கு சளி மாதிரி

இதையடுத்து அவர் வசித்து வந்த ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சர்ச்ஹில் போலீஸ் குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டு, 

கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் 

பணியாளர்கள் 10 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தினமும் பணிக்கு 

வரும் அதிகாரிகள், போலீசார், பணியாளர்கள் தானியங்கி கிருமி நாசினி வழங்கும் எந்திரத்தில் கிருமி நாசினி மூலம் கைகளை 

சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

தானியங்கி கருவி

இதற்கிடையில் காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் வைத்து முதலில் பரிசோதிக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் 

தொடுதல் மூலம் பரவும் என்பதால், தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக கைகளால் 

தொடாமலேயே உடல் வெப்பநிலையை கணக்கிட தானியங்கி கருவி நுழைவாயிலில் பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கருவியின் 

எதிரே பக்கவாட்டில் நெற்றியை கொண்டு சென்றால் உடல் வெப்பநிலை எவ்வளவு என்பதை திரையில் காண்பித்து விடும். 

வெப்பநிலை அதிகமாக இருக்கிறதா அல்லது சரியாக இருக்கிறதா என்பதை பணியில் இருக்கும் போலீசார் சரிபார்த்த பின்னரே 

உள்ளே அனுமதிக்கின்றனர். குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் இருந்தால் பீப் சத்தம் எழுப்பும். இந்த தானியங்கி கருவி மின்சாரம் மூலம் இயங்குகிறது.

Next Story