கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்


கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 9:30 PM GMT (Updated: 8 July 2020 7:06 PM GMT)

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் 74 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்து இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை,

இந்திய பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 30 சதவீதம் பங்காற்றுகின்றன. இந்தியாவில் அதிகளவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மராட்டியாவிலும், அதற்கடுத்தபடியாக பீகாரிலும், 3-வதாக தமிழ்நாட்டிலும் உள்ளன.

அந்த வகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றன?, ஊரடங்குக்கு பிறகு நிறுவனங்கள் திறக்கப்படும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? சலுகைகள் என்னென்ன வழங்க வேண்டும்? என்பது குறித்து அடிப்படை ஆய்வுகளை சென்னை ஐ.ஐ.டி. எடுத்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 1,200 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வு விவரங்கள் வருமாறு:-

* கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் 78 சதவீதம் நிறுவனங்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் 79 சதவீதம் பெருமளவில் பாதிக்கப்பட்டவையாக உள்ளன.

* சிறு, குறு நிறுவனங்களில் பொருட்களை வாங்குவோர் பாக்கித்தொகையை மிக தாமதமாக வழங்குவதால், தொழில்கள் முடங்குவதாக 41.38 சதவீத நிறுவனங்களும், சரக்கு போக்குவரத்து முடங்கியிருப்பதால் தொழில்கள் நலிவடைந்து இருப்பதாக 27 சதவீத நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

* பணிக்கு திரும்பாத ஊழியர்களின் உடல்நலக்குறைவு, சுகாதாரம் போன்ற காரணங்களும் தொழில்களை மிகவும் பாதித்து இருக்கின்றன. ஏற்கனவே நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு இருந்த ஆர்டர்களும் ரத்தாகி இருப்பதாக 50 சதவீத நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நிறுவனங்கள் பல பிரச்சினைகளை சந்தித்து சீர்குலைந்து இருப்பதாகவும், 38 சதவீத நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்களை முடிக்கமுடியாமல் திணறுவதாகவும் கூறுகின்றனர்.

* கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீண்டு எழ சுமார் 3 மாதங்கள் ஆகும் என 14 சதவீத நிறுவனங்களும், 6 மாதங்கள் வரை ஆகும் என 12 சதவீத நிறுவனங்களும் கூறியுள்ளன. இத்தகைய காரணங்களால் நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை என்று 68 சதவீத நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த காலகட்டத்தில் நிறுவனங்களின் வருவாய் இழப்பு 50 சதவீதம் 80 சதவீதம் வரை இருப்பதாக இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 74 சதவீத நிறுவனங்கள் 80 சதவீதத்துக்கு மேல் வருவாய் இழப்பை சந்தித்து இருப்பதாக கூறியிருக்கின்றனர்.

* இதை சமாளிக்க நிதி மற்றும் பணப்புழக்கம் போன்றவற்றில் கொள்கை முடிவுகள் எடுக்காவிடில் ஊழியர்கள் வேலை இழப்பு மற்றும் நிறுவனங்கள் பெரிய அளவில் மூடப்படும் அபாயம் உள்ளன.

* மேலும், கடன் தவணை, வட்டிச்செலுத்துவது குறிப்பிட்ட காலத்துக்கு தள்ளிவைக்கவேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏற்ற சிறப்பு மின்கட்டண சலுகை அளிக்கப்படவேண்டும் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நிறுவனங்களை மீட்டு எடுக்க முடியும் என்று அவர்கள் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

Next Story