வளசரவாக்கத்தில் ரவுடி வெட்டிக்கொலை


வளசரவாக்கத்தில் ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 8 July 2020 10:30 PM GMT (Updated: 8 July 2020 8:01 PM GMT)

வளசரவாக்கத்தில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை அய்யப்பன்தாங்கல், சின்ன கொளுத்துவான்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராஜ்(வயது 29). டிரைவரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி மோனிசா(25). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த ஸ்ரீகாந்த் ராஜ் மீது விருகம்பாக்கம், மதுரவாயல், கோயம்பேடு ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாந்த் ராஜ், நண்பர் கார்த்திக் என்பவருடன் வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், மீனாட்சிஅம்மன் நகரில் உள்ள தனது தந்தை பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு சென்று மது அருந்தினார். பின்னர் ஸ்ரீகாந்த் ராஜின் தந்தை பாலசுப்பிரமணியம் ஓட்டலுக்கு சென்று உணவு வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டில் தனது மகன் ஸ்ரீகாந்த் ராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது வயிறு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. அவருடன் இருந்த நண்பர் கார்த்திக்கை காணவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஷ்வரன் தலைமையிலான போலீசார் கொலையான ஸ்ரீகாந்த் ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும்? கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுபற்றி ஸ்ரீகாந்த் ராஜின் தந்தையிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தப்பியோடிய கார்த்திக்கையும் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால்தான் இந்த கொலைக்கு காரணம் முன்விரோதமா?, அல்லது தொழில் போட்டியா? அல்லது குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்பது பற்றி தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story