கொத்தவால்சாவடியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள் கொரோனா தொற்று பரவலில் அடுத்த கோயம்பேடாக மாறுகிறது


கொத்தவால்சாவடியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள் கொரோனா தொற்று பரவலில் அடுத்த கோயம்பேடாக மாறுகிறது
x
தினத்தந்தி 8 July 2020 10:45 PM GMT (Updated: 8 July 2020 8:05 PM GMT)

கொத்தவால் சாவடி சந்தைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவலில் அடுத்த கோயம் பேடாக கொத்தவால்சாவடி மாறிவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முக்கிய காரணிகளில், கோயம்பேடு மார்க்கெட்டும் ஒன்று. கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று பரவியது. அவர்களின் மூலம் தமிழகத்தின் வட மாவட்டங் களில் கொரோனா தொற்று எளிதில் பரவியது.

அதைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் மே 5-ந் தேதி சீல் வைக்கப்பட்டது. அங்கு இயங்கி வந்த பழக்கடை மற்றும் பூ கடைகள் மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. அதே போன்று அங்கு இயங்கி வந்த மொத்த காய்கறிக் கடைகள் திருமழிசைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சில்லரை கடைகளுக்கு, மளிகை, எண்ணெய், நறுமண பொருட்கள், சிறுதானியங்கள், உலர் தானியங்களை வழங்கும் மொத்த சந்தையாக கொத்தவால் சாவடி விளங்குகிறது.

இதனால், பாரி முனை, சவுகார்ப்பேட்டை, பூக்கடை, என்.எஸ்.சி. போஸ் சாலைகளிலும் சில்லரைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்க சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் அலைமோதுவது வழக்கம். கொத்தவால்சாவடியில் 800-க்கும் மேற் பட்ட காய்கறி கடைகளும் இயங்கி வருகின்றன.

கொத்தவால் சாவடியில் 3 தெருக்களில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 500 கடைகள் மூடப்பட்டன. பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் கமிஷனர் பிரகாஷ் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 6 நாட்களுக்கு கடையடைப்பு செய்தனர். இதனால் கொத்தவால் சாவடி முழுவதும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.

பின்னர் 5-வது கட்ட ஊரடங்கின் போது 30 சதவீத கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டன. தற்போது முழு அளவிலான கடைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. அங்கு மண் அள்ளி போட்டால் மண் கீழே விழாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்த்தால், கோயம்பேடு சந்தையால் கொரோனா தொற்று ஏற்பட்டதை மக்கள் மறந்துவிட்டார்களா? என்றே எண்ணத் தோன்றுகிறது.

அங்கு வருபவர்கள் பலர் முகக்கவசத்தை அணியாமலும், வியாபாரிகள் கையுறை அணியாமலும் இருப்பதை பார்க்கும் போது கொரோனா தொற்று பரவலில் அடுத்த கோயம்பேடாக கொத்தவால்சாவடி மாறிவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர். எனவே கொத்தவால் சாவடி சந்தையையும் வேறு இடங்களுக்கு தனித்தனியாக பிரித்து அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Next Story