கோபியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதம்


கோபியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 9 July 2020 10:45 PM GMT (Updated: 9 July 2020 7:02 PM GMT)

கோபியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

கடத்தூர், 

கோபி நகராட்சிக்கு உட்பட்ட கமலா ரைஸ் மில் வீதியை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் தற்போது பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைவியில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பெண் வேலை பார்த்த ஜவுளிக்கடையில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து ஜவுளிக்கடையில் வேலை பார்த்த 150 பேர் கோபி கலை அறிவியல் கல்லூரியில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் கமலா ரைஸ்மில் பகுதியில் 80-க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்து நேற்று இரவு வீடு திரும்பினார். இந்தநிலையில் அப்பகுதி மக்கள் நோய் பாதிக்காமலேயே சிகிச்சைக்கு அழைத்து சென்று இருக்கிறீர்கள். இன்னும் ஏன் எங்களை தனிமை படுத்தி வைத்துள்ளர்கள் என்று அங்குள்ள போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நோய் பாதிப்பு இல்லாமல் யாரையும் சிகிச்சைக்கு அழைத்து செல்வதில்லை. அரசு உத்தரவுப்படியே இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. முறையான அனுமதி வந்ததும், விடுவிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள்.


Next Story