100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 July 2020 2:23 AM GMT (Updated: 10 July 2020 2:23 AM GMT)

100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வார்டு வாரியாக தற்போது 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கு 4-வது வார்டில் உள்ள 100 பேருக்கு மட்டும் ஊராட்சி நிர்வாகத்தினர் வேலை கொடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வேலை வழங்கப்படாதவர்கள் எதற்காக எங்களது வார்டில் 100 பேருக்கு மட்டும் வழங்கி இருக்கிறீர்கள் மீதமுள்ள எங்களுக்கும் வேலை வழங்குங்கள் மற்ற வார்டுகளில் உள்ள அனைவருக்கும் வேலை வழங்கி விட்டு எங்கள் வார்டிற்கு மட்டும் ஏன் வழங்கவில்லை என வெற்றியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாலை இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அதன்பின் நேற்று மாலை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் பொதுமக்களிடம் பேசுகையில், தற்போது உங்கள் கிராமத்தில் உள்ள 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. இதனால் கூட்டம் கூடுவதை பெருமளவு நீங்கள் தவிர்க்க வேண்டும். அதற்காகவே 100 பேருக்கு மட்டும் வழங்கி இருக்கிறோம். மீதம் உள்ள நபர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பின் அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அவர்கள் கிராமத்தில் உள்ள சின்ன ஏரி கரையையும், அதன் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தையும், அதன் வழிப்பாதைகளில் உள்ள குப்பை மேடுகளையும் சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை மற்றொரு நாள் நேரில் பார்த்து ஆய்வு செய்து அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்து சென்றார்.

Next Story