திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 23 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 23 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 11:33 PM GMT (Updated: 10 July 2020 11:33 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா அதிகம் பாதித்த 23 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதுதவிர ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களின், உறவினர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக திண்டுக் கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 800-ஐ நெருங்கி விட்டது. இதில் திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர கடந்த சில நாட்களாக இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா பரவலை தடுக் கும் வகையில் கொரோனா பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களிடம் சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே மாவட்டத்தில் புதிதாக மேலும் சில இடங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. அதிலும் ஒருசில இடங்களில் 5-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் அதிக பாதிப்புள்ள பகுதிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. 

Next Story