ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2020 12:41 AM GMT (Updated: 11 July 2020 12:41 AM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜான்ரோஸ் (வயது 23). கடந்த மாதம் 26-ந்தேதி ஜான்ரோசை, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) அழைத்து சென்றார். அதன் பின்னர் ஜான்ரோஸ் வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார். ஜான்ரோஸ் மாயமாகி விட்டதாக அவரது உறவினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதி அருகே முள்புதரில் அழுகிய நிலையில் ஜான்ரோஸ் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், சம்பவத்தன்று போந்தூர் பகுதியில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்ரோசும், கார்த்திக்கும் அங்கு மது வாங்க சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களை தாக்க வந்தாக கருதிய கும்பல் ஜான்ரோஸ் மற்றும் கார்த்திக்கை சரமாரியாக தாக்கி உள்ளது. கார்த்திக் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். ஜான்ரோசை அந்த கும்பல் துரத்தி சென்று பலமாக தாக்கி கத்தியால் குத்தி, அவர் அணிந்து இருந்த பனியனால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து முள்புதரில் வீசியது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் போந்தூர் பகுதியை சேர்ந்த ரகுமான் (30), ரஜினி (24) முருகன் (23) ஆகியோரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story