நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று விட்டு டிரைவர் தற்கொலை


நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று விட்டு டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2020 1:16 AM GMT (Updated: 12 July 2020 1:16 AM GMT)

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை சுத்தியலால் தாக்கியும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்த டிரைவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் எண்ணெய்க்கார தெருவை சேர்ந்தவர் தேவி பிரசாத் (வயது 47). கார் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (37). இவர், அதே தெருவில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். தேவிபிரசாத் தினமும் மது குடித்துவிட்டு, மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் வீட்டு வேலைக்காக செல்லும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தேவிபிரசாத், வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவியை தாக்கினார். மேலும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தையும் இறுக்கி கொலை செய்தார். பின்னர் சமையலறைக்கு சென்ற தேவிபிரசாத் அங்கு மின்விசிறிக்கான கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சரஸ்வதியின் உடலையும், தூக்கில் தொங்கிய தேவி பிரசாத் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story