தாராபுரத்தில் சோக சம்பவம்: திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை


தாராபுரத்தில் சோக சம்பவம்: திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2020 11:11 PM GMT (Updated: 12 July 2020 11:11 PM GMT)

தாராபுரத்தில் திருமணமான 5-வது நாளில் காதல் கணவருடன் தாயார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இடத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாருதி நகரை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகள் தேவி( வயது 20). இவரும் உறவினரான உடுமலை அருகே உள்ள அமராவதியை சேர்ந்த செல்வராஜ்(29) என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். செல்வராஜ் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

உறவினர்கள் என்பதால் இவர்களது இருவரது காதலுக்கும் பெற்றோர் பச்சைக்கொடி காண்பித்து விட்டனர். இதையடுத்து கடந்த 8-ந்தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசியுடன் கணியூர் நாமகிரி அம்மன் கோவிலில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவி தனது காதல் கணவருடன் தாராபுரம் மாருதி நகரில் உள்ள தாயார் வீட்டிற்கு விருந்துக்கு வந்தார். நேற்று மதியம் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் வீட்டுக்கு வெளியே புதுமாப்பிள்ளை செல்வராஜ் உறவினர்களுடன் பேசி கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் வீட்டுக்குள் சென்ற தேவி திடீரென்று கதவை மூடி கொண்டார். வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சத்தம் போட்டும் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்கில் தேவி தொங்கி கொண்டு இருந்தார்.

உடனே தேவியை மீட்டு தனியார் ஆம்புலன்சில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தன்னுடைய காதல் மனைவி இறந்ததை அறிந்து அவரது உடலை பார்த்து செல்வராஜ் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தாராபுரம் சப்-கலெக்டரும் விசாரணை நடத்த உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story