நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி பெண் கொலை: தொழிலாளி கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி பெண் கொலை: தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 July 2020 2:01 AM GMT (Updated: 13 July 2020 2:01 AM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி பெண்ணை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆலந்தூர், 

சென்னை வேளச்சேரி அண்ணாநகர் மெயின் சாலையில் உள்ள நடைபாதையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த ரத்த காயத்துடன் கிடப்பதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த காயங்களுடன் கிடந்த பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் செல்வி (55) என்பது தெரிந்தது. வேளச்சேரி அண்ணா நகர் 5-வது மெயின் ரோட்டில் நடைபாதையில் வசித்து வந்தார். அவருடன் கும்பகோணத்தை சேர்ந்த பரணிதரன் (40) என்பவரும் உடன் தங்கி இருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் கணவன்-மனைவி போல நடைபாதையில் ஒன்றாக தங்கி, வேளச்சேரி பகுதியில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடையில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தது தெரிந்தது. அதே பகுதியில் சுற்றிதிரிந்த பரணிதரனை வேளச்சேரி போலீசார் பிடித்து விசாரித்தனர்.

போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

கடந்த 5 ஆண்டுகளாக செல்வியும், நானும் கணவன்-மனைவியாக வசித்து வந்தோம். பல நேரங்களில் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக செல்வியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. அவருக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா? என அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் இருந்தபோது என்னுடன் செல்வி வாய் தகராறில் ஈடுபட்டார். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் ஆத்திரமடைந்த நான், அருகில் கிடந்த கட்டையால் செல்வியின் தலையில் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் பரணிதரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story