மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின கடைகள் அடைப்பு


மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 13 July 2020 7:15 AM GMT (Updated: 13 July 2020 7:15 AM GMT)

கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டன.

கரூர்,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஊரடங்கு விதித்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் இந்த ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்காக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்று ஜூலை மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

முழு ஊரடங்கில் திறக்க அனுமதிக்கப்பட்ட பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் நேற்று வழக்கம் போல் இயங்கின. முழு ஊரடங்கில் கடைகளை திறந்து வியாபாரம் செய்தால், கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, உரிமையாளர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்ததால் கரூரில் உள்ள காய்கறி கடைகள், சிறிய, பெரிய மளிகை கடைகள், பழக்கடைகள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், டாஸ்மாக் கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

ஏற்கனவே பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட சூழ்நிலையில், நேற்று முழு ஊரடங்கினால் வாகனங்கள் செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கரூர் செங்குந்தபுரம்ரோடு, காமராஜபுரம் ரோடு, பிரசட்சணம்ரோடு, 80 அடி சாலை, வெங்கமேடு உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கு உத்தரவினால் கரூர் பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவரவில்லை. சிலர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வந்தனர். அவர்கள் மதியத்திற்கு பிறகு வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் பலர் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் பொழுதை களித்தனர். இதனால் தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலாயுதம்பாளையம், புகளூர், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், நொய்யல், மரவாபாளையம், புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம் நன்செய்புகளூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும், தவுட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை சாவடி அமைத்து காண்காணித்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து ஒரு கார் வந்தது. அதனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் மணமக்களுடன் அவர்களது குடும்பத்தினரும் அதிக அளவில் இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார், கொரோனா வைரஸ் குறித்து எடுத்து கூறி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இதேபோல அரவக்குறிச்சி, குளித்தலை, தரகம்பட்டி, நச்சலூர், க.பரமத்தி, சின்னதாராபுரம், வெள்ளியணை, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story