காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 பேருக்கு கொரோனா பாதிப்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 14 July 2020 1:43 AM GMT (Updated: 14 July 2020 1:43 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. நேற்று படப்பை அடுத்த ஒரத்தூர் ஊராட்சி நீலமங்கலம் பாலாஜி அவென்யூ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 62 வயது முதியவர், 54 வயது பெண், 28 வயது பெண் மற்றும் படப்பை ஊராட்சியில் உள்ள ஆத்தனஞ்சேரி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,979 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,354 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 52 பேர் உயிரிழந்துள்ளனர். 2,573 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சி அண்ணா தெருவில் வசித்து வரும் 35 வயது வாலிபர், பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள பாளையக்கார தெருவில் வசித்து வரும் 58 வயது ஆண், பெரியபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வசித்து வரும் 11 வயது சிறுவன், ஸ்ரீபதி நகரில் வசித்து வரும் 36 வயது வாலிபர், பனையஞ்சேரி ஊராட்சியில் உள்ள கருணிகர் தெருவில் வசித்து வருபவர்களான 10 வயது சிறுவன், 8 வயது சிறுமி, 30 வயது இளம்பெண், 35 வயது வாலிபர், 53 வயது பெண், அக்கரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பள்ள தெருவில் வசித்து வரும் 57 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றியம் மணவாள நகர் பகுதியில் 7 பேருக்கும், கடம்பத்தூரில் 5 பேரும், சிற்றம்பாக்கத்தில் ஒருவர், அகரத்தில் ஒருவர், பேரம்பாக்கத்தில் 2 பேர் என திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 337 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,930 ஆனது. இவர்களில் 4 ஆயிரத்து 154 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 129 பேர் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தினமங்கலம் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த 58 வயது ஆண், ஊரப்பாக்கம் சோழன் தெருவை சேர்ந்த 29 வயது வாலிபர், மறைமலைநகர் அவ்வையார் தெருவை சேர்ந்த 33 வயது வாலிபர், கூடலூர் அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 42 வயது ஆண், 42 வயது பெண், கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் 20 வயது இளம்பெண், வீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர், சீனிவாசபுரம் டாக்டர்.ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த 28 வயது வாலிபர், வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி மாணிக்க ஜலகண்ட தெருவை சேர்ந்த 30 வயது பெண், காட்டாங்கொளத்தூர் தெருவை சேர்ந்த 49 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 219 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,283 ஆக உயர்ந்தது. இவர்களில் 4,528 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story