வெங்கல் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு


வெங்கல் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 15 July 2020 1:36 AM GMT (Updated: 15 July 2020 1:36 AM GMT)

வெங்கல் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே ஆயிலச்சேரி ஊராட்சி பட்டாபி நகரை சேர்ந்தவர் அஜித் (வயது 24). கொத்தனார்.

இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், கிஷோர் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைக்கு நாளை மறுநாள் முதலாவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அஜித் வயல்வெளிக்கு சென்றார்.

அப்போது உயர் அழுத்த மின்சார கேபிள் அறுந்து விழுந்தது. இதில் சிக்கிய அஜித் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story