கன்னியகோவில், பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா ரத்து


கன்னியகோவில், பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா ரத்து
x
தினத்தந்தி 15 July 2020 10:30 PM GMT (Updated: 15 July 2020 11:20 PM GMT)

கன்னியகோவில் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகூர், 

புதுவை மாநிலம் கன்னியகோவிலில் பிரசித்திபெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏழு கன்னிமார்கள், முனீஸ்வரர்கள், மதுரை வீரன் ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தீமிதி விழா.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 4-வது வெள்ளிக் கிழமை தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அன்றையதினம் காலை கோவில் வளாகத்தில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பிற்பகலில் முருகன், வள்ளி -தெய்வானை திருக்கல்யாணமும், மாலையில் தீமிதியும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இந்த விழாவில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக் கானோர் வந்து கலந்துகொள்வார்கள்.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவலை யொட்டி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகமாகி தொற்று பாதிப்பு அபாயம் ஏற்படும் என்பதால் திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் தனசேகரன் கூறுகையில், ‘இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா மற்றும் அனைத்து உற்சவங் களும் ரத்து செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.

Next Story