திருவல்லிக்கேணியில் வாலிபர் குத்திக்கொலை - அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு


திருவல்லிக்கேணியில் வாலிபர் குத்திக்கொலை - அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 July 2020 12:32 AM GMT (Updated: 16 July 2020 12:32 AM GMT)

சென்னை திருவல்லிக்கேணியில் இரும்பு கம்பியால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை, 

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 28). இவர் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் சின்ன மார்க்கெட் பகுதியில் வசிக்கும் தனது உறவினரை பார்க்க அடிக்கடி வருவார். அவ்வாறு வரும்போது ரவி என்பவருடன் சமீபத்தில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் அடி-தடியில் ஈடுபட்டு காயம் அடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாந்த் மீண்டும் ஜாம்பஜார் பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது ஏற்கனவே மோதல் ஏற்பட்ட ரவி என்பவரின் தந்தை ரமேஷ் (45) ஸ்ரீகாந்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ‘எனது மகனை தாக்கிய உன்னை சும்மா விட மாட்டேன்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது மோதலாக வெடித்தது. இதில் ரமேஷ், வீரபத்திரன்(39) என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தை இரும்பு கம்பியால் குத்தியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த ஸ்ரீகாந்த், அதே பகுதியில் பிளாட்பாரத்தில் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் அவரது உடல்நிலை மோசமானது.

ரோந்து போலீசார் ஸ்ரீகாந்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீகாந்த் நேற்று பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் உத்தரவின் பேரில் ,உதவி கமிஷனர் சரவணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். வீரபத்திரன் நேற்று கைது செய்யப்பட்டார். ரமேசை போலீசார் தேடிவருகிறார்கள். அவர் அ.தி.மு.க.பிரமுகர் ஆவார். சாதாரண அடி-தடி மோதல் கொலையில் முடிந்து விட்டது.

Next Story