ஊத்துக்கோட்டை அருகே லாரியை கடத்த முயற்சி; டிரைவர் கைது


ஊத்துக்கோட்டை அருகே லாரியை கடத்த முயற்சி; டிரைவர் கைது
x
தினத்தந்தி 16 July 2020 2:23 AM GMT (Updated: 16 July 2020 2:23 AM GMT)

ஊத்துக்கோட்டை அருகே லாரியை கடத்தி செல்ல முயன்ற டிரைவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை,

சென்னை பம்மல் காமராஜ் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 56). லாரி டிரைவர். இவர் ராணிபேட்டையில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த 9 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரக்கு லாரியுடன் ஆந்திர மாநிலம் ஜம்மலமடுகு பகுதிக்கு புறப்பட்டார். நேற்று லாரி நிறுவன மேலாளர் கோவிந்தசாமி, ராமச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது, செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், சென்னை உட்பட பல போலீஸ் நிலையங்களில் புகார் செய்தார்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் நேற்று ஊத்துக்கோட்டையில் உள்ள நான்கு ரோடு சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை சோதனைக்காக வழிமறித்த நிலையில், டிரைவர் நிற்காமல் வேகமாக ஓட்டி சென்றார். சந்தேகமடைந்த போலீசார் லாரியை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதில், லாரியை கடத்த முயன்ற டிரைவர் ராமச்சந்திரன் இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story