குப்பை கொட்டுவதில் தகராறு: விளையாட்டு போட்டியில் பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் - என்ஜினீயர் கைது


குப்பை கொட்டுவதில் தகராறு: விளையாட்டு போட்டியில் பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் - என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 17 July 2020 12:14 AM GMT (Updated: 17 July 2020 12:14 AM GMT)

குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் விளையாட்டு போட்டியில் பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி, 

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம், ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், அந்த பகுதியில் 4 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கொட்டுவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக, இரு குடும்பத்தினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு மிரட்டல்

இது தொடர்பாக மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன், தனது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து 4 ரவுண்டு மேலே நோக்கி சுட்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அலறியடித்து ஓடிவந்து பார்த்தனர். இது குறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக போரூர் இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் தலைமையில் வந்த போலீசார் விசாரணை செய்தனர். அதில் இரு வீட்டுக்கும் இடையே குப்பை கொட்டுவது, கழிவுநீர் விடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்ததும், அதன் காரணமாக நாகேந்திரன், சாந்தி குடும்பத்தினரை மிரட்ட துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.

விளையாட்டு போட்டி

நாகேந்திரன் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அதுகுறித்து விசாரணை செய்தனர். அதில் அந்த துப்பாக்கி, விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்பதும், துப்பாக்கி சுடும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் உள்ள அவர், அதற்காக அந்த துப்பாக்கியை ஆன்லைனில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வாங்கி வைத்து இருப்பதும் தெரிந்தது.

இதில் உண்மையான துப்பாக்கி தோட்டாவை பயன்படுத்த முடியாது என்பதால் சாந்தி குடும்பத்தை மிரட்ட ரவை போன்ற போலி தோட்டாவை பயன்படுத்தி சுட்டதும் தெரிந்தது. நாகேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story