பாரம்பரிய நெல் சாகுபடிக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்கும் அமைச்சர் காமராஜ் பேச்சு


பாரம்பரிய நெல் சாகுபடிக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்கும் அமைச்சர் காமராஜ் பேச்சு
x

பாரம்பரிய நெல் சாகுபடிக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்கும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

மறைந்த நம்மாழ்வார்் கடந்த 2007-ம் ஆண்டு நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார். அதனை முன்னெடுத்து நடத்தி வந்தவர் மறைந்த நெல் ஜெயராமன். தமிழர்களின் பாரம்பரியமான நெல் ரகங்களை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் நெல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 14-வது தேசிய நெல் திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு துரைசிங்கம் தலைமை தாங்கினார். வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் தியாகபாரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் வரவேற்றார். விழாவை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் காமராஜ்

விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பாரம்பரிய விதை நெல்லை விவசாயிகளுக்கும், பாரம்பரிய உணவு தயாரிப்புகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

உரிய அங்கீகாரம்

நம்மாழ்வார் வழியில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டார். 176 பாரம்பரிய ரக நெல்லை மீட்டெடுத்துள்ளார். பாரம்பரிய நெல் சாகுபடிக்கு உரிய அங்கீகாரத்தை அரசு நிச்சயம் வழங்கும். விவசாயி என்றால் தனிப் பெருமை நிச்சயம் உண்டு. எத்தனை மாற்றங்கள் வந்தாலும் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அந்த வகையில் இது போன்ற நெல் திருவிழா நடத்துவது சிறப்புக்குரியது. எல்லா காலங்களிலும் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அரசாக இந்த அரசு இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாய கண்காட்சி

முன்னதாக நெல் திருவிழாவையொட்டி விவசாயிகள் பங்கேற்ற ஊர்வலம், விவசாய கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் படங்களை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த்கண்ணா, முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, கலியபெருமாள், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரதராஜன் நன்றி கூறினார்.

Next Story