பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 2:56 AM GMT (Updated: 17 July 2020 2:56 AM GMT)

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேரும், அரியலூர் மாவட்டத்தில் 94.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளுக்கு கொரோனா ஊரடங்கினால் விடைத்தாள் திருத்தும் பணி தாமதமானதால், தேர்வு முடிவு வெளியிடுவதிலும் தாமதமானது. இந்நிலையில் நேற்று காலை திடீரென்று தமிழக அரசு பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது என்று அறிவித்தது. எந்தவித முன்னறிவிப்பின்றி திடீரென்று நேற்று தேர்வு முடிவு வெளியானதால் மாணவ-மாணவிகள் கலக்கம் அடைந்தனர். கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் மாணவர்களின் மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ- மாணவிகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

சரியாக காலை 9.30 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகளில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து புதிய முறை கொண்டு வரப்பட்டதால், அதன்படி இந்த ஆண்டும் மாணவ- மாணவிகள் அதிகம் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மாணவ- மாணவிகளின் மதிப்பெண் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 73 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 719 மாணவர்களும், 3 ஆயிரத்து 907 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 626 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 501 மாணவர்களும், 3 ஆயிரத்து 774 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 275 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 95.40 சதவீதம் ஆகும்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 82 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 561 மாணவர்களும், 4 ஆயிரத்து 582 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 143 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 307 மாணவர்களும், 4 ஆயிரத்து 381 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 688 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 94.41 சதவீதம் ஆகும்.

மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள், அவர்களின் பெற்றோர் செல்போனிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களது பெற்றோர் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வு முடிவு வந்தது. இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது. இதனால் மாணவ- மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்களது பெற்றோர் செல்போன் மூலம் அறிந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கினால் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிகளில் தேர்வு பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் வீடுகள் அல்லது இருந்த இடத்திலேயே இருந்து தங்களது செல்போன்கள் மூலம் பிளஸ்-2 தேர்வு முடிவுக்கான இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தில் 18 பேரும், பொருளாதாரம் பாடத்தில் 4 பேரும், கணக்கு பதிவியியல் பாடத்தில் 3 பேரும், வேதியியல், கணிதம், அடிப்படை மின் பொறியியல், கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 29 மாணவி- மாணவிகள் 100-க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் யாரும் 100-க்கு, 100 மதிப்பெண்கள் பெறவில்லை. இதே போல் வணிகவியல், உயிரியியல், தணிக்கையியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் யாரும் 100-க்கு, 100 மதிப்பெண்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story