3 பேரை கொன்று பாழடைந்த கிணற்றில் புதைத்த வழக்கில் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை; மற்றொருவருக்கு 14 ஆண்டு சிறை


3 பேரை கொன்று பாழடைந்த கிணற்றில் புதைத்த வழக்கில் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை; மற்றொருவருக்கு 14 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 17 July 2020 6:13 AM GMT (Updated: 17 July 2020 6:13 AM GMT)

3 பேரை கொன்று பாழடைந்த கிணற்றில் புதைத்த வழக்கில் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனையும், அவரது சகோதரருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் பரபரப்பான தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 36). இவர் மெத்தை, ஷோபா தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருடைய மகள் பார்கவி (17). இவரும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பார்கவி, கடந்த 28.5.2012 அன்று சென்னைக்கு சென்று அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னையும், தனது காதலன் சதீசையும் சேர்த்து வைக்கக்கோரி முறையிட்டார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த காதலர்களை என்னுடைய தந்தை முருகன் கொலை செய்துவிட்டு அவர்களது உடல்களை வீட்டின் பின்புறமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் புதைத்து விட்டதாகவும், இந்த விஷயத்தை எனது தாய் ராஜேஸ்வரி மூலமாக தெரிந்து கொண்டதாகவும் கூறினார். பார்கவி, இவ்வாறு தனியார் தொலைக்காட்சியில் தோன்றி தனது தந்தையின் கொடூர செயலை பற்றி பரபரப்பான தகவலை கூறிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

3 பேர் கொலை

இந்நிகழ்ச்சியை பார்த்த செஞ்சி அருகே உள்ள நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த சேகரின் மனைவி ஜீவா (40) என்பவர் கடந்த 1.6.2012 அன்று விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகள் லாவண்யாவை (16) தேடி எம்.குச்சிப்பாளையத்தில் உள்ள உறவினர் முருகன் வீட்டிற்கு சென்ற தனது கணவர் சேகர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. எனவே முருகன் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்தி தனது கணவரை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகனின் மகள் பார்கவி, தனியார் தொலைக்காட்சியில் கூறியதுபோன்று லாவண்யாவையும், அவரது காதலனான நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனையும் (20), லாவண்யாவை தேடிச்சென்ற சேகரையும் முருகன் கொலை செய்து, வீட்டின் பின்புறமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் புதைத்ததும், இதற்கு முருகனின் தம்பி மதியரசன், நண்பர் மூர்த்தி ஆகியோர் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

காரணம் என்ன?

இதையடுத்து முருகன், மதியரசன், மூர்த்தி மற்றும் கொலையை மறைத்ததாக முருகனின் மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

முருகன் தனது தொழில் சம்பந்தமாக அடிக்கடி நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள உறவினர் சேகர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சேகர் பண உதவியும் செய்துள்ளார். இவ்வாறு அடிக்கடி சென்று வந்ததால் முருகனுக்கும், சேகரின் மகள் லாவண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதற்கிடையில் லாவண்யாவும், அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு முருகனின் வீட்டில் தங்கினர்.

அடுத்தடுத்து கொலை

இதையறிந்து எம்.குச்சிப்பாளையத்திற்கு சென்ற சேகரை கயிற்றால் கழுத்தை இறுக்கி முருகன் கொலை செய்தார். பின்னர் சேகரின் உடலை, தனது வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் குழிதோண்டி புதைத்தார். இந்த கொலைக்கு மூர்த்தி, சிலம்பரசன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.பின்னர் லாவண்யா தனது தந்தை சேகர் எங்கே இருக்கிறார்? என்று 3 பேரிடமும் கேட்டுள்ளார். இதனால் 3 பேரும் சேர்ந்து லாவண்யாவை கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு சேகரை புதைத்த அதே இடத்திலேயே லாவண்யாவையும் புதைத்தனர்.

இந்த சம்பவங்களுக்கு பிறகு சிலம்பரசன் அடிக்கடி மது குடித்துவிட்டு முருகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதோடு தனக்கு பணம் தரவில்லையெனில் நடந்த கொலைகளை பற்றி வெளியில் சொல்லிவிடுவேன் என்று முருகனை மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், மதியரசன், மூர்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து சிலம்பரசனை கொலை செய்து ஏற்கனவே 2 பேரை புதைத்த அதே இடத்திலேயே அவரது உடலை புதைத்துள்ளனர்.

தீர்ப்பு

3 பேர் கொலை தொடர்பாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூர்த்தி இறந்து விட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று பரபரப்பான தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், மதியரசன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறி அவர்களுக்கு தண்டனை விதித்தும், முருகனின் மனைவி ராஜேஸ்வரியை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

3 ஆயுள் தண்டனை

அவரது தீர்ப்பில், முதல் குற்றவாளியான முருகன் செய்த கொடூர கொலை சம்பவத்திற்காக ஒவ்வொரு கொலைக்கும் ஒரு ஆயுள் தண்டனை வீதம் 3 ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு கொலைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்திற்காக ஒவ்வொரு கொலைக்கும் தலா 2 ஆண்டு வீதம் 6 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும், மதியரசன் செய்த கொலை குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை காலங்களை இருவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் முருகன் 42 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், மதியரசன் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். தொடர்ந்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.

Next Story