வைப்பு தொகையை திரும்ப கேட்டு கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்


வைப்பு தொகையை திரும்ப கேட்டு கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 17 July 2020 10:44 PM GMT (Updated: 17 July 2020 10:44 PM GMT)

பல்லடம் அருகே வைப்பு தொகையை திரும்ப கேட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள பருவாயில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தில் மொத்தம் ரூ.44 லட்சம் உறுப்பினர்களால் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது,. மேலும் இந்த சங்கத்தின் சார்பில் நகை கடன், பயிர் கடன், மத்திய கால கடன், சுய உதவிக்குழு கடன்,நுகர்பொருள் கடன், மகளிர் சிறுவணிகக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் மொத்தம் ரூ.99லட்சத்து 95 ஆயிரத்து 517 வழங்கப்பட்டது.

இந்த சங்கத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊழியரை, சங்கத்தில் இருந்து சம்பளம் வழங்க முடியாத நிலையில் அவரை தொட்டம்பட்டி கூட்டுறவு சங்கத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவர் மாதம் 5-ந் தேதியுடன் இந்த சங்கத்தில் வைப்புத்தொகை தொகை செலுத்திய 13 பேருக்கு ரூ.25லட்சம் முதிர்வடைந்து இருப்பதால் அந்த தொகையை திரும்ப கேட்டு வைப்பு தொகை வைத்துள்ளவர்ளக், சங்க அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் சங்க செயலாளர் ஜெயமணி ஓரிரு நாட்களில் திரும்ப வழங்கிவிடுவதாக கடந்த ஒரு மாதமாக கூறிவந்துள்ளார்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று மாலை தங்களுக்கு டெபாசிட் தொகையை திரும்ப வழங்குமாறு வலியுறுத்தி வாடிக்கையாளர்கள் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டுனர். இது பற்றி தகவல் அறிந்த பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம், காமநாயக்கன்பாளையம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று வைப்புத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வங்கியில் வைப்புத்தொகை வைத்துள்ள பல்லடம் ஆராகுளத்தை சேர்ந்த பூங்கொடி கூறியதாவது:-

மகள் திருமணத்திற்காக பாதுகாப்பாக இருக்கட்டும் என்று அரசின் நிறுவனமான கூட்டுறவு வங்கியில் இடம் விற்பனை செய்த ரூ.11 லட்சத்தை வைப்பு தொகையாக போட்டு வைத்து இருந்தேன். தொகை முதிர்வடைந்தும் பணம் வழங்காமல் இழுத்தடிப்பதால் நல்ல வரன் கிடைத்தும் தனது மகள் திருமணத்தை நடத்தி வைக்க முடியவில்லை. இவ்வறு அவர் கூறினார். 

Next Story