வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று


வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 July 2020 11:49 PM GMT (Updated: 17 July 2020 11:49 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஆலந்தூர், 

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் 20 நாடுகளில் சிக்கி தவித்த 35 ஆயிரத்து 397 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனைவரும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஏற்கனவே 639 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தற்போது முகாமில் தங்கி இருந்தவர்களில் சவுதி அரேபியாவில் இருந்து வந்த 9 பேருக்கும், வளைகுடா நாடுகள், மாலத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 2 பேருக்கும், சிங்கப்பூர், பக்ரைன், ஓமன், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 91 ஆயிரத்து 626 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்தது.

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று 68 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 109 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 33 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 30 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

Next Story