விவசாயியை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு


விவசாயியை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 21 July 2020 6:24 AM GMT (Updated: 21 July 2020 6:24 AM GMT)

திருக்கோவிலூர் அருகே விவசாயியை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டிபுரத்தை சேர்ந்தவர் திலவேந்திரன் மகன் சின்னப்பன்(வயது 35). விவசாயி. இவர் கடந்த 25.4.2013-ம் ஆண்டு தனது நிலத்தில் இருந்து கரும்பு தோகையை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அதே ஊரை சேர்ந்த கோவிந்தன்(35) என்பவர் மீது சின்னப்பன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் தீராத கோவிந்தன் தனது உறவினர்கள் குமார்(30), வேடப்பன்(26), தணிகைநாதன்(35) ஆகியோருடன் சின்னப்பனின் வீட்டிற்கு சென்று அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சின்னப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து சின்னப்பனின் மனைவி செல்வமேரி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தன், குமார், வேடப்பன், தணிகைநாதன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கோவிந்தன், குமார், வேடப்பன், தணிகை நாதன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில், சிறப்பு வக்கீல் வேலவன் ஆஜரானார். சிறைதண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் கடலூர் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். 

Next Story