பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி 300 கி.மீ. வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் கைது


பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி 300 கி.மீ. வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 July 2020 10:45 PM GMT (Updated: 21 July 2020 9:44 PM GMT)

பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி 300 கி.மீ. வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூருவில்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் இன்று(புதன்கிழமை) வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தேவையின்றி யாரும் வெளியே வாகனங்களில் சுற்றிதிரிய கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதாவது ஒரு மேம்பாலத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வது தான் அந்த வீடியோவின் சிறப்பம்சம். இந்த வீடியோ பார்த்த வாலிபர்கள் பலர்கள் வீடியோவுக்கு லைக் தெரிவித்தனர். ஆனால் ஒரு சிலர் இவ்வளவு வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லலாமா? என்று தங்களின் கருத்துகளை பதிவிட்டு இருந்தனர். இந்த வீடியோ பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் கவனத்திற்கு சென்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சென்றது பெங்களூருவை சேர்ந்த முனியப்பா(வயது 30) என்பதும், அவர் ஊரடங்கு உத்தரவை மீறி எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முனியப்பா மீது எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story