மின் கட்டண குளறுபடிகளை கண்டித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


மின் கட்டண குளறுபடிகளை கண்டித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2020 11:00 PM GMT (Updated: 21 July 2020 11:34 PM GMT)

மின் கட்டண குளறுபடிகளை கண்டித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மேகநாதன், நகர செயலாளர் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டை விட்டு வெளியே போனால் அபராதம் விதிப்பது. கொரோனா காலத்திலும் மின் கட்டணத்தில் கொள்ளையடிப்பதை கைவிட வேண்டும். பிற மாநிலங்களில் மின் கட்டணத்தில் சலுகை வழங்குவது போல் தமிழகத்திலும் சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மீனவர் அணி அமைப்பாளர் சேகர், நெசவாளர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகம் முன்பு கீழையூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் மின்சார கட்டண குளறுபடிகளை கண்டித்தும், வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழையூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். இதில் பேரூர் கழக பொறுப்பாளர் மரிய சார்லஸ், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

வாய்மேட்டை அடுத்த மருதூர் கடைத்தெருவில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மறைமலை தலைமையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதயம் முருகையன், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சித. கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆயக்காரன்புலத்தில் விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் பாலு தலைமையிலும், நத்தம் பள்ளத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மகா குமார் தலைமையிலும், சித்தாய்மூரில் தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமையிலும், தலைஞாயிறு கடைத்தெருவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், துளசாபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் தலைமையிலும், தகட்டூரில் ஊராட்சி செயலாளர் வீரமணிகண்டன் தலைமையிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உமாபதி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வடிவேல், மாவட்ட பகுத்தறிவு பேரவையின் துணை அமைப்பாளர் ஹமீது ஜஹபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய மாணவரணி செயலாளர் இளஞ்செழியன், திருமருகல் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்டுமாவடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் தங்கமணி ஆகியோர் தலைமையிலும், பனங்குடியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் தலைமையிலும், பண்டாரவாடை ஊராட்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோகன் தலைமையிலும், திருச்செங்காட்டங்குடியில் மாவட்ட துணை செயலாளர் இளஞ்செழியன் தலைமையிலும், பூதங்குடியில் திருமருகல் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீனாட்சிசுந்தரம், காமராஜ், நகர செயலாளர் புகழேந்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் மறைமலை ஆகியோர் அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறையாறில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் செம்பனார்கோவிலில் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அன்பழகன் தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் முன்னிலையில் கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் உள்ள மின்சாரத்துறை அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமை தாங்கினார். மயிலாடுதுறை முத்தூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் நகரசபை தலைவர் லிங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருக்கடையூரில் தி.மு.க.வினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்து முன்னிலை வகித்தார். சீர்காழியில் கட்சியின் நகர செயலாளர் சுப்பராயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிம்மேலியில் சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையிலும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் பேரூர் செயலாளர் அன்புச்செழியன் தலைமையிலும், எருக்கூரில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குபேரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையிலும், கொள்ளிடத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல சேதுரவிக்குமார் தலைமையிலும், பழையபாளையத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன் தலைமையிலும், வேட்டங்குடியில் ஒன்றிய துணை செயலாளர் மகேஸ்வரி மாரிமுத்து தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. குத்தாலம்

குத்தாலம் துணை மின் நிலையம் எதிரே தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குத்தாலம் பேரூர் செயலாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் மாநில மாணவர் அணி துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.

Next Story