பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது பற்றி 4 மண்டல பொறுப்பாளர்களுடன் எடியூரப்பா ஆலோசனை - அதிகாரிகளுக்கு எச்சரிக்கை


பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது பற்றி 4 மண்டல பொறுப்பாளர்களுடன் எடியூரப்பா ஆலோசனை - அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 July 2020 11:00 PM GMT (Updated: 22 July 2020 9:08 PM GMT)

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து 4 மண்டல பொறுப்பாளர்களுடன் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். மக்கள் பிரச்சினையை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளை அவர் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வு இல்லை என்று கூறியுள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு இல்லை என்றாலும், பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 8 மண்டலங்களின் பொறுப்பாளர்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று ராஜராஜேசுவரிநகர், தாசரஹள்ளி, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா ஆகிய 4 மண்டலங்களின் பொறுப்பாளர்கள், அரசு அதிகாரிகளுடன் தனித்தனியாக முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

முதலாவதாக ராஜராஜேசுவரிநகர் மண்டல பொறுப்பாளர், அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். இதில், மந்திரிகள் சோமசேகர், சுதாகர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்த மண்டலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா கேட்டு அறிந்து கொண்டார்.

அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை. உடனே முதல்-மந்திரி எடியூரப்பா, நான் இன்னும் எத்தனை முறை ஆலோசனை நடத்துவது, தினமும் ஆலோசித்து கொண்டே இருந்தால் கொரோனா பரவலை எப்படி கட்டுப்படுத்த முடியும். மக்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிர் இழக்கிறார்கள். அதுபற்றி உங்களது (அதிகாரிகள்) கவனத்திற்கு வரவில்லையா?. இனிமேல் எந்த ஒரு மண்டலத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை, ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்று ஏதேனும் சிறிய அளவிலான புகார்கள் வந்தால் கூட சகித்துக்கொள்ள மாட்டேன். அதற்கு அதிகாரிகளே முழு பொறுப்பு ஆவார்கள். ஒவ்வொரு பிரச்சினை பற்றியும் நான் சொன்னால் தான் தீர்த்து வைக்க முன்வர வேண்டுமா?.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியதாக எந்த அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு கூறியதில்லை. ஆனால் கொரோனாவால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உணர்ந்து மனிதாபிமானத்துடன் பணியாற்றுங்கள். உங்கள் பணியை சரியாக செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் கூட்டம் நடத்தி, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங் கள் என்று கூறுவதற்கு நீங்கள் என்ன சிறு பிள்ளைகளா?. கொரோனா பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மண்டல பொறுப்பாளருடன் ஆலோசித்து உடனடியாக தீர்வு காணுங்கள். மக்கள் பிரச்சினையை தீர்க்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில் மண்டல பொறுப்பாளர்களும் தினம், தினம் தங்களது மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரம், அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையாக பணியாற்றுங்கள். உங்களது மண்டலத்தில் கொரோனாவால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முதலில் பொறுப்பாளர்கள் பட்டியலிடுங்கள். பின்னர் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையை எடுங்கள். ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருப்பது தெரிந்தால் வாடகைக்கு எடுங்கள், தேவைப்பட்டால் புதிதாக ஆம்புலன்ஸ் வாங்குங்கள்.

ஊரடங்கால் மட்டும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட முடியாது என்று நினைத்து செயல்படுங்கள். அதிகமான பரிசோதனை மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்கவும், படுக்கை வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுங்கள் என முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இதுபோல, தாசனஹள்ளி, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா மண்டலங்களின் பொறுப்பாளர்கள், அதிகாரிகளுடனும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

Next Story