திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 July 2020 9:42 PM GMT (Updated: 26 July 2020 9:42 PM GMT)

குடும்ப பிரச்சினை காரணமாக திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால்,

திருநள்ளாறு கீழசுப்ராய புரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் இளம்பூரணம் (வயது 31). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் டைல்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு பாமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. பாமா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு இளம்பூரணம், மனைவி பாமாவுடன் கீழகாசாக்குடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இளம் பூரணம், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மனைவியிடம் கூறிவிட்டு நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறினார்.

தூக்கில் தொங்கினார்

இதனால் கவலை அடைந்த பாமா, உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்த நிலையில், நேற்று காலை கீழவெளி களத்துமேட்டில் உள்ள ஆலமரத்தில் இளம்பூரணம் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த திருநள்ளாறு போலீசார் விரைந்து வந்து, தூக்கில் தொங்கிய இளம்பூரணத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story