வேலூர் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் சேதமடைந்த கடைகள் சீரமைப்பு


வேலூர் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் சேதமடைந்த கடைகள் சீரமைப்பு
x
தினத்தந்தி 27 July 2020 12:50 AM GMT (Updated: 27 July 2020 12:50 AM GMT)

வேலூரில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் பலத்த காற்றால் சேதமடைந்த கடைகள் சீரமைக்கும் பணி நடந்தது. காய்கறி கடைகளை மீண்டும் நேதாஜி மார்க்கெட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நேதாஜி மார்க்கெட்டில் இயங்கி வந்த மொத்த விற்பனை காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகே மாற்றப்பட்டன. அதேபோன்று சில்லரை விற்பனை காய்கறி கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன.

மாங்காய் மண்டி அருகேயுள்ள தற்காலிக மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் தகர ஷீட்டுகளை கொண்டு 85 கடைகள் அமைக்கப்பட்டன. இரவு வேளையில் மட்டுமே மார்க்கெட் இயங்குவதால் அனைத்து கடைகளுக்கும் மின்விசிறி, மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூரில் பலத்தமழை பெய்தது. அப்போது வீசிய காற்றில் தற்காலிக மார்க்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட கடைகளின் தகர ஷீட்டுகள் காற்றில் பறந்தன. மேலும் பல கடைகள் முற்றிலும் உருக்குலைந்தன. அங்கிருந்த காய்கறி மூட்டைகள் மழையில் நனைந்தன. அதனால் கடை வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். சேதமடைந்த கடைகளை சீரமைத்து தரும்படி வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

நேதாஜி மார்க்கெட்டிற்கு மாற்ற கோரிக்கை

அதன்பேரில் தற்காலிக மார்க்கெட்டில் காற்றினால் சேதமடைந்த அனைத்து கடைகளும் சீரமைக்கும் பணி நேற்று காலை நடந்தது. தகர ஷீட்டுகளை கொண்டு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது போன்று கடைகள் அமைக்கப்பட்டது.

மேலும் அவை காற்றில் பறந்து செல்லாத வகையில் கட்டப்பட்டன. முழுஊரடங்கு என்பதால் லாரிகளில் காய்கறிகள் வரவில்லை. அதனால் மார்க்கெட்டில் தேங்கி நின்ற மழைநீர் மற்றும் காற்றில் பறந்த தகர ஷீட்டுகள் அகற்றும் பணி எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டது. தற்காலிக மார்க்கெட்டில் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய வசதி இல்லை. அதனால் மழைநீர் அங்கே தேங்கி நிற்கிறது. தற்காலிக மார்க்கெட்டில் உள்ள கடைகளில் குறைந்த அளவு காய்கறி மூட்டைகளே சேமித்து வைக்க முடியும். மழை பெய்தால் கடையில் உள்ள அனைத்து காய்கறி மூட்டைகளும் நனைந்து வீணாகி விடும். எனவே காய்கறி கடைகளை மீண்டும் நேதாஜி மார்க்கெட்டிற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

Next Story