ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 27 July 2020 4:47 PM GMT (Updated: 27 July 2020 4:47 PM GMT)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.7 கோடியே 70 லட்சம் மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் டாஸ்மாக் வசதிக்காக வேலூர், அரக்கோணம் ஆகிய 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளன. வேலூர் கோட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகள் உள்ளது. அரக்கோணம் கோட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

கொரோனா தொற்று தடுப்பு காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

ரூ.7½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

இதையொட்டி நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை முதல் இரவு விற்பனை நேரம் முடியும் வரை ஏராளமான மதுபிரியர்கள் கடைகளின் முன்பு குவிந்தனர். அவர்கள் ரம், விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபானங்களை வாங்கி சென்றனர். இதன்காரணமாக வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.1½ கோடி மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது.

நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் ரூ.4 கோடியே 70 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.

அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.3 கோடியே 10 லட்சம் மதுபானங்கள் விற்பனையானது. ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.7 கோடியே 70 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story