ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 27 July 2020 10:29 PM GMT (Updated: 27 July 2020 10:29 PM GMT)

தான் சேமித்து வைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம் டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் நித்திஷ்குமார்(வயது 20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக கல்லூரி விடுமுறை என்பதால் அமைந்தகரை பகவதி அம்மன் கோவில் அருகே உடலில் பச்சை குத்தும்(‘டாட்டூ’) கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நித்திஷ்குமார், நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டால் போனையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவரது தம்பி, கடைக்கு வந்து பார்த்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அங்கு கடையின் உள்ளே நித்திஷ்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய நித்திஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவர் நித்திஷ்குமார், ஆன்லைன் விளையாட்டில் விளையாடி வந்ததாகவும், அதில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் நித்திஷ்குமார் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், எழுதி இருப்பதாவது:-

விளையாடி தோற்றேன்

என்னோட இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை, நான் தான். மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த என்னோட பணத்தை எல்லாம் நான் விளையாட்டில் தோற்றுவிட்டேன். கடையில் இருந்தும் ரூ.20 ஆயிரம் எடுத்து விளையாடி தோற்றுவிட்டேன். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பைத்தியம் ஆகிவிட்டேன்.

நான் எடுக்கிற முடிவு தப்புதான். எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடுங்க சேகர் அண்ணா, உங்களை கேட்காம உங்க பணத்தை எடுத்து தப்பு பண்ணிட்டேன். அம்மா, அப்பா உங்களை எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும், மன்னிச்சிடுங்க.

காதலி

என்னோட காதலிதான் என் உயிர். எல்லாமே அவதான். என்னை மன்னிச்சிரு. அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன். அழுகாத, வீட்டுல உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுப்பாங்க. என்னோட போன் பாஸ்வேர்டும் இதுதான்.

எல்லோருக்கும் தகவல் கொடுங்க. முக்கியமாக என் காதலிக்கு. கடைசியா அவ என்னை பார்த்ததும் என்னை தூக்கிட்டு போங்க. எல்லாருக்கும் சாரி, பணம் வென்றது. என் தம்பியை நல்லா பாத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நித்திஷ்குமாரின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரது நண்பர்களிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story