பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் மறுதேர்வை 15 பேர் எழுதினர்


பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் மறுதேர்வை 15 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 27 July 2020 11:09 PM GMT (Updated: 27 July 2020 11:09 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட்டது. பிளஸ்-2 மறுதேர்வை 15 மாணவ-மாணவிகள் எழுதினர்.

நெல்லை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 24-ந் தேதி நடைபெற்ற தேர்வான வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வை பல மாணவர்களால் எழுத முடியவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. தேர்வு எழுத விரும்பிய சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு நேற்று தேர்வு நடத்தப்பட்டது.

9 மையங்களில்...

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே அரியகுளத்தில் உள்ள சாரதா மகளிர் மேல்நிலைப்பள்ளி, சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லை அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, கல்லிடைக்குறிச்சி தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி, விக்கிரமசிங்கபுரம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 பள்ளிக்கூடங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பார்வையிட்டார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் உள்ள 7 தேர்வு மையங்களில் பிளஸ்-2 மறுதேர்வு நடந்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 19 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 15 மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினர். 4 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

சான்றிதழ் வினியோகம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சேர தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் இணையதளம் மூலம் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டன. தலைமை ஆசிரியர் கையெழுத்துடன் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு மாற்றுசான்று, வருகை பதிவேடுக்கான சான்று, நன்னடத்தை சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று சான்றிதழ்களை வாங்கி சென்றனர். வருகிற 30-ந் தேதி வரை சான்றிதழ் வினியோகம் செய்யப்படுகிறது.

Next Story