அம்பை அருகே பயங்கரம் காதல் திருமண விவகாரத்தில் மெக்கானிக் அடித்துக்கொலை


அம்பை அருகே பயங்கரம் காதல் திருமண விவகாரத்தில் மெக்கானிக் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 28 July 2020 11:12 PM GMT (Updated: 28 July 2020 11:12 PM GMT)

அம்பை அருகே காதல் திருமண விவகாரத்தில் மெக்கானிக் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊர் கமிட்டி நிர்வாகிகள் உள்பட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பிரம்மதேசம் பஞ்சாயத்து கவுதமபுரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன்கள் ரவிச்சந்திரன் (வயது 50), மதியழகன் (45).

ரவிச்சந்திரன், ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். மெக்கானிக்கான மதியழகன், அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் அம்பையில் இருந்து தங்களது ஊருக்கு தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர்.

வழிமறித்து தாக்கிய கும்பல்

கவுதமபுரி அங்கன்வாடி மையம் அருகில் சென்றபோது, அங்கு மறைந்து இருந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென்று ரவிச்சந்திரன், மதியழகன் ஆகிய 2 பேரையும் வழிமறித்தது. பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரன், மதியழகன் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர்.

போலீசார் விசாரணை

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும், சிகிச்சை பலனின்றி மதியழகன் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். ரவிச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்து..

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். முதற்கட்ட விசாரணையில், ரவிச்சந்திரனின் மகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்காக ஊர் கமிட்டிக்கு செலுத்த வேண்டிய பணத்தை ரவிச்சந்திரன் செலுத்தாமல் இருந்தார். பின்னர் அதற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. அதனையும் ரவிச்சந்திரன் செலுத்தவில்லை.

இதுதொடர்பாக ரவிச்சந்திரனுக்கும், ஊர் கமிட்டி நிர்வாகிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. பின்னர் ரவிச்சந்திரனிடம் ஊர் கமிட்டியினர் வரிப்பணம் வாங்காமல், அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

10 பேருக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக ஊர் கமிட்டி நிர்வாகிகள் மீது ரவிச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரன், அவருடைய தம்பி மதியழகன் ஆகிய 2 பேரையும் மர்மநபர்கள் வழிமறித்து தாக்கினர். இதில் மதியழகன் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக ஊர் கமிட்டி நிர்வாகிகள் உள்பட 10 பேர் மீது அம்பை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அம்பை அருகே காதல் திருமண விவகாரம் தொடர்பாக அண்ணனுடன் சென்ற மெக்கானிக் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story