திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்


திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
x
தினத்தந்தி 28 July 2020 11:32 PM GMT (Updated: 28 July 2020 11:32 PM GMT)

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர், 


கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாக அமையும். அதனைக் கருத்தில் கொண்டு, 2018-19-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் 70 பேருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றதும் பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். இந்த திறனாய்வு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறையினரால் நடத்தப்படும்.

திறன் பெற்றவராக இருத்தல்...

திருக்குறள் முற்றோதல் போட்டியில் பரிசு பெறுவதற்கு 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளை கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் படிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் அரசு, அரசு உதவிபெறும், தனியார், பதின்ம பள்ளிகள் போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம்.

விண்ணப்பம்

இது தவிர கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கூடங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் போட்டியில் பங்கு பெறலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தமிழ் வளர்ச்சி துறையால் வழங்கப்பெறும் இப்பரிசை, இதற்கு முன்பு பெற்றவராக இருத்தல் கூடாது.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பத்திட வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள 04142-292039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story