கர்நாடகத்தில் இன்று தொடங்குகிறது என்ஜினீயரிங் உள்பட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு


கர்நாடகத்தில் இன்று தொடங்குகிறது என்ஜினீயரிங் உள்பட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு
x
தினத்தந்தி 29 July 2020 10:06 PM GMT (Updated: 29 July 2020 10:06 PM GMT)

என்ஜினீயரிங் உள்பட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 1.90 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) திட்டமிட்டப்படி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று (வியாழக்கிழமை) காலையில் உயிரியல், மாலையில் கணிதம், நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் இயற்பியல், மாலையில் வேதியியல் தேர்வு நடக்கிறது. 1-ந் தேதி வெளிமாநில மற்றும் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாணவர்களுக்காக கன்னட தேர்வு நடைபெற உள்ளது.

ஒரு பாடத்தேர்வு 80 நிமிடங்கள் நடக்கிறது. கன்னட தேர்வு மட்டும் 60 நிமிடங்கள் நடைபெறும். இதில் மாநிலம் முழுவதும் 1.90 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகிறார்கள். பெங்களூருவில் மட்டும் சுமார் 42 ஆயிரம் பேர் தேர்வை எழுத உள்ளனர். இதில் 1,800 மாணவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தேர்வு எழுத உள்ளனர்.

40 பேருக்கு கொரோனா

தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 14 பேர் உள்ளனர். அவர்கள் 40 பேரையும் தனி அறையில் வைத்து தேர்வு எழுத அனுமதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் மட்டும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தேர்வு மையங்களை சானிடைசர் மூலம் தூய்மைபடுத்துதல், முகக்கவசம் அணிவது, தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்தல் போன்றவற்றை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அஸ்வத் நாராயண் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எந்த பிரச்சினையும் இல்லை

தொழிற்படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நாளை (இன்று), நாளை மறுநாள் (நாளை) மற்றும் ஆகஸ்டு 1-ந் தேதி ஆகிய 3 நாட்களில் நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் சுமார் 1.90 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகிறார்கள். கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்த எல்லா ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை நடத்துவதில் அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது நாங்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அதே போல் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு ஆங்கில தேர்வையும் பிரச்சினை இன்றி நடத்தினோம். அதே போல் இந்த பொது நுழைவு தேர்வையும் நாங்கள் எந்த வித சிக்கலும் இன்றி நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த ஏப்ரல் மாதம் 23, 24-ந் தேதி பொது நுழைவு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தேர்வுக்கு ஆஜராகலாம்

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மே மாதம் 12-ந் தேதி, பொது நுழைவு தேர்வு ஜூலை 30, 31-ந் தேதி, ஆகஸ்டு 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நாளில் இருந்து இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம். கொரோனா பாதிப்பு உள்ள மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கிறோம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் தங்களின் பெற்றோார் ஒருவருடன் வெளியே வந்து தேர்வுக்கு ஆஜராகலாம்.

தேர்வு மையங்களில் சமூக விலகல், முகக்கவசம் அணிவது மற்றும் சானிடைசர் திரவத்தை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story