ஊட்டியில் பலத்த மழை


ஊட்டியில் பலத்த மழை
x
தினத்தந்தி 29 July 2020 11:04 PM GMT (Updated: 29 July 2020 11:04 PM GMT)

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இதனால் ஊட்டி நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை முதல் ஊட்டி நகரில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் காலை 11.30 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல இந்த மழை பலத்த மழையாக பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சில கடைகளுக்கு நடுவே மழைநீர் தேங்கியது.

மழை விட்ட பின்னர் வழிந்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் குடைகளை பிடித்தபடி சென்றனர். சிலர் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மழை வெறித்த பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். ஊட்டி அருகே உள்ள முத்தோரை, எம்.பாலடா, லவ்டேல், புதுமந்து போன்ற சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டியில் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.

Next Story