ஊராட்சி கோட்டை குடிநீர் குழாயில் சோதனை ஓட்டம் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது


ஊராட்சி கோட்டை குடிநீர் குழாயில் சோதனை ஓட்டம்  குழாய் உடைந்து தண்ணீர் வீணானது
x
தினத்தந்தி 30 July 2020 2:04 AM GMT (Updated: 30 July 2020 2:04 AM GMT)

ஊராட்சி கோட்டை குடிநீர் குழாயில் சோதனை ஓட்டத்தின்போது குழாய் உடைந்து தண்ணீர் வீணானது.

ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், ரூ.484 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பவானி அருகே வரதநல்லூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. தண்ணீரை சுத்தப்படுத்த 2 ஏர்லேட்டர், அழுக்கு நீக்க தொட்டி, 38 பில்டர் பெட் மற்றும் 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீரை பிரித்து வழங்கும் வகையில் சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் 1 கோடியே 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. இது தவிர, மாநகராட்சியில் 21 புதிய மேல்நிலை தொட்டிகளும், 46 பழைய குடிநீர் தொட்டிகள் மூலம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சோதனை ஓட்டம்

இந்த நிலையில் ஊராட்சி கோட்டை குடிநீர் குழாயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. அப்போது அதிகாரிகள் தண்ணீரின் அழுத்தம் குறித்து சோதனை செய்தனர். இந்த பணியின் போது ஈரோடு ரெயில் நிலையம் முன்பு பதிக்கப்பட்டு உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. மேலும் கொல்லம்பாளையம் சோதனைச்சாவடி பகுதியிலும் ஊராட்சி கோட்டை குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறியது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, ‘ஊராட்சி கோட்டை குடிநீர் குழாயில் தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. மேலும் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 96 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கும் விரைந்து இணைப்பு கொடுக்கப்படும். அனைத்து பணிகளும் இன்னும் 2 மாதங்களுக்குள் நிறைவடைந்துவிடும்’ என்றார்.

Next Story