வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஓசூரில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகம்


வரலட்சுமி நோன்பை முன்னிட்டு   ஓசூரில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 30 July 2020 5:33 AM GMT (Updated: 30 July 2020 5:33 AM GMT)

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஓசூரில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ஓசூர்,

வரலட்சுமி நோன்பு விழா, நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருமணமான பெண்கள் அனைவரும் இந்த நாளில் விரதம் இருந்து லட்சுமிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, சூளகிரி, பாகலூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் வீடுகளில், இந்த பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஓசூரில் உள்ள பூ மார்க்கெட்டுகள், பழக்கடைகளில் நேற்று விற்பனை அமோகமாக நடைபெற்றது. பூ மார்க்கெட்டுகளில் ரோஜா, மல்லிகை, சாமந்தி, பட்டர் ரோஸ் உள்ளிட்ட பூ வகைகள் வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்பனையானது. இதேபோல், பழக்கடைகளிலும் வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பழ வகைகள் மற்ற நாட்களைவிட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது.

வியாபாரிகள் மகிழ்ச்சி

இந்த கடைகளுக்கு ஏராளமான பொதுமக்கள் முக கவசம் அணிந்தவாறு தங்களுக்கு தேவையான பூ மற்றும் பழங்களை வாங்கிச்சென்றனர். இதேபோல், பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்களும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால், ஓசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள பூ கடைகள் மற்றும் கடை வீதி பரபரப்பாக காணப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தபோதிலும், நோன்பை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்துடன், இந்த கடைகளில் விற்பனை அதிகளவில் நடைபெற்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story