தஞ்சை மாவட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்த ரூ.48½ கோடியில் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி தலைமை பொறியாளர் ஆய்வு


தஞ்சை மாவட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்த   ரூ.48½ கோடியில் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி   தலைமை பொறியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2020 5:41 AM GMT (Updated: 30 July 2020 5:41 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் ரூ.48½ கோடியில் நிலத்தடி நீரை மேம்படுத்த செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட நிலநீர் மேம்பாட்டிற்காக பொதுப்பணித்துறை மூலம் செயற்கை முறை செறிவூட்டும் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, அக்னியாறு பகுதிகளில் உள்ள வடிகால்களில் 605 செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்படுகிறது.

இதில் ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் உள்ள கல்லணை கால்வாய் பகுதியில் 99 ஏரிகளில் செறிவூட்டும் கிணறுகள் அமைக்க ரூ.48 கோடியே 45 லட்சத்து 81 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தஞ்சை நிலநீர் கோட்டம் சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலைமை பொறியாளர் ஆய்வு

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் ஆறுகளில் ஒரு சில பகுதிகளில் இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏரி பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட சொக்கநாதபுரம் மற்றும் கொள்ளுக்காடு கிராமங்களில் உள்ள ஏரிகளில் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை சென்னை தரமணியில் உள்ள நீர் ஆதார மற்றும் நில மேற்பரப்பு விவரக்குறிப்பு மைய தலைமை பொறியாளர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “ஏரிகளில் தண்ணீர் வரும் போது கட்டுமானம் நடைபெறும் பகுதியை சுற்றி சிறிய அரண் அமைத்து கூடுதல் கவனம் செலுத்தி பணிகள் எந்தவித தடையுமின்றி மேற்கொள்ள வேண்டும்.

அதே போல் பணிகளை விரைவாகவும், தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்” என்றார். ஆய்வின் போது தஞ்சை நிலநீர் கோட்ட பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் வரதராஜன், உதவி பொறியாளர்கள் லதா, சந்திரிகா, அங்கயற்கண்ணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story