கால்கள் செயலிழந்ததால் சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல வழியின்றி தவித்தவருக்கு உதவிய நவாஸ்கனி எம்.பி.


கால்கள் செயலிழந்ததால் சவுதி அரேபியாவில் இருந்து  சொந்த ஊருக்கு செல்ல வழியின்றி தவித்தவருக்கு உதவிய நவாஸ்கனி எம்.பி.
x
தினத்தந்தி 31 July 2020 2:48 AM GMT (Updated: 31 July 2020 2:48 AM GMT)

கால்கள் செயலிழந்ததால் சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல வழியின்றி தவித்தவருக்கு நவாஸ்கனி எம்.பி. உதவினார்.

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டம் பாளையேந்தல் கிராமத்தை சேர்ந்த வள்ளி மகன் கண்ணன் பாண்டியன். இவர் சவுதி அரேபியா ரியாத்தில் 20 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கண்ணன் பாண்டியன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் பைபாஸ் ஆபரேஷன் செய்து மீண்டும் சவூதிக்கு சென்றார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலையின் போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். கண்ணன் பாண்டியனின் கால்கள் இரண்டும் செயல்பாடின்றி இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனா ஊரடங்கால் தாயகம் திரும்ப முடியாமல் தவிர்த்து வந்தார். இதைதொடர்ந்து பாண்டியனின் தாயார் ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் கதியத்துல்லாவை தொடர்பு கொண்டார். பிறகு நவாஸ்கனி எம்.பி.யை தொடர்புகொண்டு அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை, சவுதியில் உள்ள தூதரகம், தமிழக அரசு மக்கள் தொடர்புத்துறையை ராமநாதபுரம் எம்.பி. தொடர்பு கொண்டார். மேலும் ரியாத்தில் உள்ள காயிதே மில்லத் பேரவை முகம்மது பைசலை தொடர்பு கொண்டு கண்ணன் பாண்டியனை சொந்த ஊருக்கு அழைத்து வர துரிதமான நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பிறகு ரியாத் காயிதே மில்லத் பேரவை உறுப்பினர்கள் மூலம் ரியாத் விமான நிலையத்தில் இருந்து கண்ணன் பாண்டியன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை நவாஸ்கனி எம்.பி. விமான நிலையம் சென்று அழைத்து வந்தார். இதைதொடர்ந்து நவாஸ்கனி எம்.பி.க்கு, கண்ணன் பாண்டியன் நன்றி தெரிவித்தனர். மேலும் கண்ணன் பாண்டியனை இந்தியா அழைத்துவர முயற்சித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நவாஸ்கனி எம்.பி. நன்றி தெரிவித்தார்.

Next Story