ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடையம் விவசாயி உடல் மறு பிரேத பரிசோதனை நடந்தது உறவினர்களிடம் ஒப்படைப்பு


ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடையம் விவசாயி உடல் மறு பிரேத பரிசோதனை நடந்தது உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 1 Aug 2020 1:01 AM GMT (Updated: 1 Aug 2020 1:01 AM GMT)

ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடையம் விவசாயி உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை அடுத்த வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயியான இவர், கடையம் மந்தியூர் பகுதியில் தோட்டம் வைத்து பயிர் செய்து வந்தார். அந்த தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக கடையம் வனத்துறையினர் அணைக்கரை முத்துவை கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதையடுத்து அணைக்கரை முத்து உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அன்று இரவு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, வனத்துறையினர் தாக்கியதால் தான் அணைக்கரை முத்து இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அணைக்கரை முத்து குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐகோர்ட்டில் மனு

இந்த நிலையில் அணைக்கரை முத்து மனைவி பாலம்மாள், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “எனது கணவர் வனத்துறையினர் தாக்கியதால் இறந்தார். அவரது உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை செய்துள்ளனர். எனவே உடலை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், நெல்லை மருத்துவக்கல்லூரி தடயவியல் மருத்துவத்துறை தலைவர் செல்வமுருகன், பேராசிரியர் பிரசன்னா, தூத்துக்குடி மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் சுடலைமுத்து ஆகியோர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அணைக்கரை முத்து உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மறுபிரேத பரிசோதனை

அதன்படி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அணைக்கரை முத்து உடல் மறுபிரேத பரிசோதனை நடந்தது. தடயவியல் டாக்டர் குழுவினர் காலை 11.30 மணிக்கு வந்தனர். அம்பை மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயனும் வந்தார்.

ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு அணைக்கரை முத்து மனைவி பாலம்மாள், மகன்கள் நடராஜன், வள்ளிநாயகம், மகள்கள் வசந்தி, மாரியம்மாள், பூங்கோதை எம்.எல்.ஏ., தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், இளைஞர் அணி செயலாளர் கிங் தேவேந்திரன், மக்கள் கண்காணிப்பகத்தை சேர்ந்த மோகன் உள்பட பலர் வந்து இருந்தனர். பகல் 12 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கி, 1.45 மணிக்கு முடிந்தது. பரிசோதனை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பகல் 2.15 மணி அளவில் உடல் சொந்த ஊரான வாகைக்குளம் கொண்டு செல்லப்பட்டது.

பூங்கோதை எம்.எல்.ஏ. பேட்டி

இதற்கிடையே பூங்கோதை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “மறைந்த அணைக்கரை முத்துவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறந்து ஒருவார காலமாகி விட்டது. பல போராட்டங்களை சந்தித்து நீதிமன்றத்தை நாடிய பிறகு மறுபிரேத பரிசோதனை நடந்துள்ளது. எங்கள் நம்பிக்கை எல்லாம் நீதிமன்றத்தின் மீது தான் இருக்கிறது. அணைக்கரை முத்து குடும்பத்தின் முழு கோரிக்கையையும் இந்த அரசு ஏற்கவில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளை இதுவரை விசாரணை கூட நடத்தவில்லை. அவர்களை பணி இடைநீக்கம் கூட செய்யவில்லை. அணைக்கரை முத்து குடும்பத்தின் கேள்விக்கு தமிழக அரசு கட்டாயம் பதில் செல்ல வேண்டும். அவரின் குடும்பத்தோடு தி.மு.க. துணை நின்று போராடும்“ என்றார்.

உடல் அடக்கம்

விவசாயி அணைக்கரை முத்து உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலையில் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன், மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ சோழன், மகேஷ் பாண்டியன், வெங்கடேஷ் பாண்டியன், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story