தர்மபுரி அருகே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பலி - மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்வு


தர்மபுரி அருகே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பலி - மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 31 July 2020 10:15 PM GMT (Updated: 1 Aug 2020 3:25 AM GMT)

தர்மபுரி அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள எட்டியானூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக கடந்த 18-ந்தேதி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் கடந்த 22-ந்தேதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அசாமில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். என்ஜினீயர், ஓசூரில் வசித்த தர்மபுரியை சேர்ந்த வெங்காய வியாபாரி, பென்னாகரம் முள்ளுவாடியை சேர்ந்த 2 முதியவர்கள் என ஏற்கனவே 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். தற்போது இந்த முதியவர் உயிரிழந்திருப்பதால் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் முதியவர் இறந்த சம்பவம் எட்டியானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story