ஓசூரில், பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் வியாபாரி பிணம்


ஓசூரில், பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் வியாபாரி பிணம்
x
தினத்தந்தி 31 July 2020 9:30 PM GMT (Updated: 1 Aug 2020 3:49 AM GMT)

ஓசூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வியாபாரி பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்

ஓசூரை அடுத்த சித்தனப்பள்ளி அருகே உள்ள விஷ்ணு ஆனந்தன் கேலக்ஜி என்ற தனியார் லே அவுட்டில் வசித்து வந்தவர் முத்தமிழ் குமரன் (வயது 38). பாக்கு மட்டை வியாபாரி. மேலும் இவர் தியானம் போன்றவற்றை கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கொரோனா ஊரடங்கு என்பதால் தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் குழந்தையை சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் முத்தமிழ் குமரன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக, அக்கம், பக்கத்தினர் அட்கோ போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் அழுகிய நிலையில் முத்தமிழ் குமரன் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தமிழ் குமரன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூட்டிய வீட்டில் பாக்கு மட்டை வியாபாரி அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story