மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Aug 2020 6:00 AM GMT (Updated: 1 Aug 2020 5:50 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்த கருப்பையா மகன் செந்தில் (வயது 37). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2013-ம் ஆண்டு வீட்டில் தனிமையில் இருந்த மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.

பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு செந்திலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க தேனி மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து செந்திலை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story