ஊஞ்சல் கட்டி விளையாடிய 12 வயது சிறுமி கழுத்து இறுக்கி சாவு


ஊஞ்சல் கட்டி விளையாடிய 12 வயது சிறுமி கழுத்து இறுக்கி சாவு
x
தினத்தந்தி 2 Aug 2020 1:05 AM GMT (Updated: 2 Aug 2020 1:05 AM GMT)

வீட்டில் துப்பட்டாவில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுக்கி 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி,

புதுவை வில்லியனூர் எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் அபிராமி (வயது39). கட்டிடத்தொழிலாளி. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகள்கள் அகிலா (18), ஆசினி (12) ஒதியம்பட்டில் உள்ள ஒரு தனியார் மாத்திரை கம்பெனியில் அகிலா வேலை செய்து வருகிறார். ஆசினி கணுவாபேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தாள். நேற்று முன்தினம் அபிராமியும், அகிலாவும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த ஆசினி மேற்கூரையில் துப்பாட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பட்டா கழுத்தை இறுக்கியது. அப்போது அங்கு தற்செயலாக பக்கத்து வீட்டை சேர்ந்த சாரதி (14) துப்பட்டாவில் கழுத்து இறுக்கிய நிலையில் இருந்த ஆசினியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததன்பேரில் அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து ஆசினியை மீட்டு சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு ஆசினியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீசார் ஏட்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோரிமேட்டில் இதேபோல் வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது 9-ம் வகுப்பு மாணவர் கழுத்து இறுக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story