வெள்ளகோவிலில், மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; புதுமாப்பிள்ளை பலி


வெள்ளகோவிலில், மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 2 Aug 2020 6:00 AM GMT (Updated: 2 Aug 2020 5:52 AM GMT)

வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 30). இவர் கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள பல்லவன் கிராம வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு அடுத்த மாதத்தில் (செப்டம்பர்) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற் காக குடும்பத்தினர் பெண் பார்த்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் புதுமாப்பிள்ளையான நந்தகுமார் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளகோவில்-சத்திபாளையம் ரோட்டில் சிபி நகர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒரு மொபட்டில் சேனாபதிபாளையத்தை சேர்ந்த சரவணன் (45) என்பவர் வந்துகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நந்தகுமார் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு நந்தகுமாரை பரிசோதனை செய்த டாக்டர்க அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

சரவணனை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story